தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். தமிழ் மொழிப் பாடத்துடன் தொடங்கிய இந்தத் தேர்வு, சமூக அறிவியல் தேர்வுடன் முடிவு பெற்றது.
இதனையடுத்து தேர்வு முடிவுகள் எப்போது முடிவுகள் வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் மே மாதம் 19ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது
இந்த நிலையில் முன் கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற மே மாதம் 16ஆம் தேதி காலையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகலில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 16 அன்று, tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச்/ஏப்ரல் 2025-இல் நடைபெற்ற 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (1) பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது.
வகுப்பு பத்தாம் வகுப்பு (SSLC)
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்- 16.05.2025 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு
மேல்நிலை முதலாமாண்டு (1)
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் 16.05.2025 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்- லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.