சம்பைப்பட்டினத்தில் நடைபெற்ற இஜ்திமா! இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! (படங்கள்)

தப்லீக் ஜமாஅத் சார்பில் இந்த ஆண்டுக்கான ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் இஜ்திமா நேற்றும் இன்றும்(07/02/24)(08/02/24) தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அடுத்த சம்பைப்பட்டினத்தில் நடைபெற்றது.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி நடைபெற்ற இந்த இஜ்திமாவில் சுமார் இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த இஜ்திமாவிற்காக சம்பைப்பட்டினத்தில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. மேலும் தப்லீக் ஜோன்கள் வாரியாக தனித்தனியே உணவுக்கூடங்களும் அமைக்கப்பட்டு நேற்றும் இன்றும் இஜ்திமாவிற்கு வந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. ஐந்து நேரத் தொழுகையும் இஜ்திமா பந்தலிலேயே நடைபெற்றது.

மேலும் இஜ்திமா நடைபெற்ற இடத்தில் ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகளும் உழு செய்யும் இடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த இஜ்திமாவில் பெரும் பெரும் ஆலிம்கள் உத்தரப்பிரதேசம் டெல்லி போன்ற இடங்களில் இருந்து வந்து சிறப்புரை ஆற்றினார்கள்.

சம்பைப்பட்டிணம், செந்தலைப்பட்டினம், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள், தன்னார்வலர்கள், இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் இஜ்திமா ஒருங்கிணைப்பு, போக்குவரத்து சீர்செய்தல், வந்தவர்களுக்கு வழிகாட்டுதல், உணவு பரிமாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்தனர்.

இறுதியாக துஆவுடன் இஜ்திமா நிறைவுபெற்றது.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times