ஜனநாயகத்தின் நான்காவது தூணை சிதைக்க நினைக்கிறதா உள்ளூர் திமுக?

அதிரையில் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் திமுகவினர் மற்றும் நகராட்சி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் சுமத்தி மிரட்டல் விடுத்ததாக அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் குற்றம்சாட்டி இருக்கிறது.

இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாழக்கிழமை அன்று  “அதிரையில் குடிநீரை குடிப்பதுபோல் நடித்த ஆளுமைகள்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. 3வது வார்டு சுரைக்காய்க்கொல்லை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியிலிருந்து வந்த குடிநீரை நகர்மன்ற தலைவர் எம்.எம்.எஸ்.தாஹிரா அம்மாளின் கணவர் எம்.எம்.எஸ்.அப்துல் கரீம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் துணை தலைவரும் திமுக நகர செயலாளருமான இராம.குணசேகரன் உள்ளிட்டோர் குடிநீரை வாயில் வைத்து விட்டு கீழே துப்பியதை அந்த வீடியோ காட்சி படுத்தியது.

இந்நிலையில், அதிரை எக்ஸ்பிரஸ் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக கூறி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் பொய் புகார் ஒன்றை இராம.குணசேகரன் அளித்துள்ளார்.  அதனடிப்படையில், காவல் நிலையத்திலிருந்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரை தொடர்புக்கொண்ட அதிகாரி ஒருவர், புகார் விவரம் குறித்து ஏதும் தெரிவிக்காமல் காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளார். மேலும் விவரம் கேட்டதற்கு அந்த அதிகாரி விவரம் ஏதும் கூறவில்லை.

இதனையடுத்து காவல் நிலையம் சென்ற அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்களை மிரட்டும் தொனியில் உள்ளூர் திமுக-வினர் கூச்சலிட்டு பேசினர்.

அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில்  ஆளுமைகள்” என்ற உயரிய வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அவற்றை திரித்து பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக உள்ளூர் திமுக பிரமுகர்கள் காவல்துறையை பயன்படுத்தி மிரட்டும் தொனியில் செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதனை சட்டப்படி எதிர்கொள்ள அதிரை எக்ஸ்பிரஸ் தயாராக உள்ளது.

மேலும் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் இத்தகைய நபர்கள் மீது துறை ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Prayer Times