சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. ஜித்தாவின் அல் அந்தலூஸ் பகுதியில் அமைந்துள்ள துணைத் தூதரக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், காலை சரியாக 7:00 மணிக்கு இந்திய துணைத் தூதர் (Consul General) திரு. ஃபஹத் அகமது கான் சூரி (Fahad Ahmed Khan Suri) தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியர்கள் திரண்டிருந்த வேளையில், குறிப்பாக ஜித்தா வாழ் அதிரையர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர். தாய்நாட்டின் மீதான பற்றையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்நிகழ்வில், அதிரையர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் சுதந்திர தின வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, துணைத் தூதரக வளாகம் முழுவதும் கம்பீரமான இந்திய மூவர்ணக் கொடியின் துணிகளாலும் தோரணங்களாலும் மிக நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தேசத்தின் சுதந்திரத்தைப் போற்றுவதோடு, சவூதி அரேபியாவில் உள்ள இந்தியச் சமூகத்தினரிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்திய மிகச் சிறப்பான நிகழ்வாக இது அமைந்தது.


















